Friday, 28 March 2014

கான்கிரீட் காடுகள்

பள்ளிப் பருவத்தில்  ( 1968  - 1970 ) ,  வாரப் பத்திரிகை ஒன்றில்  "  எங்கு  பார்த்தாலும்  கான்கிரீட்  காடுகள் " என்ற சுஜாதாவின்  வரிகளைப்  படித்து  ரசித்ததுண்டு. " என்ன ஒரு  அதிதமான  கற்பனை "   என்று  வியந்ததும்  உண்டு.  பின்னர்  பல  எழுத்தாளர்களின்  கற்பனையில்  ' பளபளவென்ற  தார் ரோடு, மழ  மழவென்ற  சிமெண்ட் சாலைகளை"  சந்தித்ததுண்டு.

பாரதியின்  ' காணி நிலம்  வேண்டும், வீடு  வேண்டும்,  வீட்டைச் சுற்றி  தோட்டம்  வேண்டும் "  என்ற  கனவில்  பாதி  நினைவானது. பின் வந்த எழுத்தாளர்களின் கற்பனையில் வந்த  கான்கிரீட்  காடுகளும்  பளபளவென்ற  சிமெண்ட்  சாலைகளும்  நினைவானது.  வீடும்,  வீட்டைச் சுற்றிய  கான்கிரீட்  காடுகளும், சிமெண்ட் தளங்களும்தான்   இன்றைய நிஜம்.

நகரங்கள்  மட்டுமல்ல, சிறு கிராமங்களும்  சிமெண்ட்  தரையில்  பளபளவென
மின்னுகின்றன.

ஏரிகள், குளங்கள் இருந்தாலும், அதற்கு நீர் கொணர்ந்த  பாதைகளும், கால்வாய்களும்  காணாமல் போய்விட்டன.

கான்கிரீட்  போர்வையால் , வான் தரும்  மழை நீரை உறிஞ்சமுடியாமல்  இந்த  மண் தவிக்கும் தவிப்பு  மனிதனுக்கு  புரியவில்லை.

சிறு வயதில், திருவானைக்காவல்  ஜம்புகேச்வரரையும், அவரைச் சுற்றி   நீர்   ஊற்றெடுத்துப்  பெருகுவதையும்   கண்கள் விரிய  பார்த்திருக்கிறேன்.  ஆனால்  இன்று,  ஊற்றுக் கண்கள்  அடைபட்டுப் போனதால்,  சிவ லிங்கத்தை சுற்றி நீர்  ஊற்றெடுப்பதில்லை  என்று  எங்கோ  படித்து  கண்  கலங்கியிருக்கிறேன். கோவிலைச்  சுற்றி  கான்கிரீட்  காடுகள்  முளைத்ததின்  விளைவோ  இது ?

இறைவா !!   வானவர்களுக்கு  அமுதம் தந்த  நீ , இந்த வெறும்  நரர்களுக்கு    நீரைத்தரமாட்டாயா?


















No comments:

Post a Comment